வெள்ளி, 17 டிசம்பர், 2010

அழாதீர்கள் !

யாருக்குப் பிடிக்கும் 
இந்த அழுகை ? 
அதனால் அழாதீர்கள் ! 
 அழுகை ஆயுளைக் குறைக்கும் ! 
 அழுகை ஆற்றலை அழிக்கும் ! 
 அழுகை ஆண்மையை ஒழிக்கும் ! 
 அழுகை உங்கள் ஒரு காசுக் 
கடனைக்கூடக் குறைக்காதே ! 
அதனால் அழாதீர்கள் ! 
 யாருக்குப் பிடிக்கும் இந்தப் புலம்பல் ? 
அதனால் புலம்பாதீர்கள் ! 
 இளஞனே ! இரும்பு ஒடிக்கும் 
நரம்பு உனக்கு -நீ 
புலம்புவதும் வீண்தானே !

வெள்ளி, 10 டிசம்பர், 2010

கருவிழிக்குள் வசிப்பவளே !



அன்பு படர்ந்த

மலர்க்கொடியே !

என்
ஆயுள் காதலியே !


மணக்கும்
அரும்பாக

இனிக்கும்
கரும்பாக

குறும்பு மொழி பேசி
என்
நெஞ்ச இரும்பை
எறும்பாக்கிப்
போனவளே !

மதுமலரே !
மரிக்கொழுந்தே !
மல்லிகைப்
பூச்சரமே !
கலைமானே !
மலைத்தேனே !
பனி இதழே !
உன்னைப்
பருகாமல்
சருகானதே
நெஞ்சம் !

என்
கண்கள்
உன்னைத்
தேடித்தேடி
ஏமாந்த
நிமிஷங்களில்...
என்
விரல்கள்
உன்
படங்களைத்
தடவிப்பார்த்து
ஆறுதல்
கொள்கின்றன
காதலி !

விட்டு விட்டுத்
துடிக்கும்
இதயம்
நீ
விட்டுப்பிரிந்ததால்
தவிக்கிறதே !

காந்த ஊசி
எப்போதும்
வடக்கு நோக்கியே
நிற்பதுமாதிரி
என்
கண்களும்
உன்னை நோக்கியே
தவமிருக்கிறது
காதலி !

தூக்கம்
காணாத
காற்றைப்போல
என்
இதய மாடத்தில்
இரவும் பகலும்
உலவிக்கொண்டே
இருக்கிறது
உன் உருவம் !

என்
இருவிழியின்
கருவிழிக்குள்
வசிப்பவளே !

உன்
நினைவுகளை
அறுத்தெறிந்துவிட்டு
தூக்கச்சமுத்திரத்தில்
நான்
நீந்தும்போதும்
என்
பக்கத்தில்
மிதந்துகொண்டே
இருக்கிறது
உன்
முகம் !

சிரித்து மயக்கும்
உன்
ரோஜா இதழ்களில்
சத்தான முத்தமிட்டு
கூந்தல் கலைத்து
உன்
குங்குமப்பூ மார்பில்
குடியிருக்க
நான்வருவேன் !

தணியாத
காதலோடு
தனியாகத்தவிக்கும்
உன்
காதலன் ...

செவ்வாய், 7 டிசம்பர், 2010

உயிர் குடித்துப் போனவள் !

இளமை பூத்துக் 
குலுங்குகின்ற 
பருவத்தில்தான் 
எத்தனை ! எத்தனை ! 
வண்ணக்கனவுகள் ! 
 அந்நாளில் 
எனக்குப் பதினெட்டு ! 
நீயோ பருவ மொட்டு ! 
பிரியமானவளே ! 
நான் உன்னைப் 
பார்த்திருக்கக்கூடாது ! 
பார்த்திருந்தாலும் 
பேசியிருக்கக்கூடாது ! 
எங்கேயோ பிறந்த நீ 
எங்கேயோ பிறந்த 
என் உள்ளத்தில் 
எத்தனை காயங்களை 
ஏற்படுத்திவிட்டாய் ! 
 காதல் என்றால் 
கசப்பான வார்த்தையென 
நினைத்திருந்தேன் ! 
உன்னைப் பார்க்கும் வரையில் ! 
ஆனால் -நீ 
சிறகில்லாமல்
பறக்கும் வித்தையை 
என் இதயத்திற்குக் 
கற்றுக்கொடுத்தாய் ! 
 
கண்களால் 
பேசும் கலையை 
என் விழிகளுக்குக் 
கற்றுக்கொடுத்தாய் ! 
ஆண்டுவிழா மேடையில் 
காற்றிலே மிதந்துவந்த 
கவிதையாய் ...
அழகுமலர் நீ 
ஆடவந்தாய் ! 
தளிர்மேனி குலுங்க ! 
தண்டுக்கால்கள் தாளமிட ! 
மலர்க்கரங்கள் அசைய !  
வந்ததே என் 
தங்கச்சிலை ! 
தந்ததே எழில் சிந்தும் 
புது இன்பக்கலை ! 
அப்பப்பா ! 
எத்தனை பாவங்கள் ! 
எத்தனை அபிநயங்கள் ! 
ஒவ்வொரு அசைவிலும் 
என் உயிர் குடித்துப்போனாய் ! 
வீடுவந்த பின்னும் 
விடிய விடிய 
என் கண்ணுக்குள் ஆடி 
நெஞ்சுக்குள் குடிபுகுந்தாய் ! 
உன்னை மட்டுமே சுற்றிப் 
பறக்கும் வண்டானதே ! 
என் நினைவுகள் ! 
எரிமலையைக் 
குளிரவைக்கும் 
உன் ஈரப் பார்வை ! 
மின்சாரம் அறுந்து விழுந்து 
இருண்டு கிடக்கும் 
இரவில் ! 
நிலவொளியில் 
எப்போதாவது 
தலைகாட்டும் 
உன் ஆசைமுகம் !  
எப்போதும் 
நான் பார்த்திருக்க 
வரம் ஒன்று தருவாயா ? 
என் வடிவான பேரழகி !